மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மடி குடிமைக்கண் தங்கின் - மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் - அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும், (மடியினது தன்மை - காரியக் கேடு. குடிமை - குடி செய்தல் தன்மை. அஃது அதனை உடைய அரசன் மேற்றாதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாம் தன்மை - தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.)
மணக்குடவர் உரை:
குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின் அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்.
இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மடிமை குடிமைக்கண் தங்கின் -சோம்பல் தன்மை குடிசெய்வானிடம் அமையின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் -அது அவனைத்தன் பகைவர்க்கு அடிமையாக்கி விடும்.
மடிமை என்றது இங்கு அதன் விளைவாகிய கருமக் கேட்டை. குடிமை குடிசெய்யுந்தன்மை. அது இங்கு அதனையுடைய அரசனைக் குறித்தமை , ' தன்னொன்னார்க்கு ' என்பதனால் அறியப்படும். குடிசெய்தல் தன் குடியைச் செல்வம் ,இன்பம் , அறிவு , ஒழுக்கம் , ஆட்சி ,வலிமை முதலிய எல்லாவகையிலும் மேம்படச்செய்தல். பகைவர்க்கு அடிமையாதலாவது சிறைபுகுதல் அல்லது திறைசெலுத்துஞ் சிற்றரசனாதல்.
கலைஞர் உரை:
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி
விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்
சாலமன் பாப்பையா உரை:
குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பொதுக் காரியங்களைச் செய்யச் சோம்பினால் ஊரார் அவமதிப்போடு முடியும். ஆனால் குடும்ப காரியங்களில் சோம்பினால்) ஒருவன் தன் குடும்பக் காரியங்களில் சோம்ப லுள்ளவனாக இருப்பானாகில் அக் குற்றம் அவனுடைய பகைவர் களுக்கும் ஏவல் செய்து பிழைக்க வேண்டிய அடிமையாக்கிவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மடியானது நற்குடியில் பிறந்தவனிடத்தில் இருந்துவிடுமானால், அது அவனைத் தன்னுடைய பகைவர்களுக்கு அடிமையாகும் தன்மையினை உண்டாக்கிவிடும்.
Translation
If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be.
Explanation
If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.