படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் - நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.)
மணக்குடவர் உரை:
தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர்.
இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நடுவு அன்மை நாணுபவர் - நடுவுநிலையன்மைக்கு அஞ்சி நாணுபவர்; படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளைக் கவர்வதனால் தமக்குண்டாகும் பயனை விரும்பிப் பழிக்கத் தக்க செயல்களைச் செய்யார்.
'நடுவு' தமவும் பிறவும் ஒப்ப நாடிப் பிறவுந் தம்போற் பேணுதல்.
கலைஞர் உரை:
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர்
தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில்
ஈடுபடமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
அநியாயம் செய்ய அஞ்சுகிறவர்கள், அப்போதைக்கு வரக்கூடிய நன்மைகளைமட்டும் கருதிப் பிறர்பொருளைக் கவர்ந்து கொள்ள ஆசைப்பட்டுப் பழிச் சொல்லுக்கு ஆளாகக்கூடிய குற்றங்களைச் செய்யமாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நடுவு நிலைமை இல்லாதிருப்பதற்கு அஞ்சுபவர்கள் பின்னர் வரும் பயனை விரும்பிப் பழிக்கு ஆளாகக் கூடிய செயல்களை செய்ய மாட்டார்கள்.
Translation
Through lust of gain, no deeds that retribution bring,
Do they, who shrink with shame from every unjust thing.
Explanation
Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.
Transliteration
Patupayan Veqkip Pazhippatuva Seyyaar
Natuvanmai Naanu Pavar
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்