தோன்றின் புகழொடு தோன்றுக-ஒருவர் இவ்வுலகத்திற் பிறக்கின் புகழ்க் கேதுவான குணத்தொடு பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குண மில்லாதார் பிறத்தலை விடப் பிறவாதிருத்தலே நல்லது.
பிறத்தலும் பிறவாமையும் இறைவன் ஏற்பாட்டின்படி அல்லது ஊழின் அமைப்புப்படியே நிகழ்வதால், அவை பிறப்பவரின் உணர்ச்சியொடு கூடியனவும் விருப்பிற்கு அடங்கியனவுமல்ல. ஆதலால், இங்குத் 'தோன்றுக', 'தோன்றற்க' என்று கூறியதெல்லாம், புகழுக் கேற்ற நல்வினை செய்வானைப் பாராட்டியதும் அது செய்தானைப் பழித்ததுமேயன்றி வேறல்ல என அறிக . புகழ் என்பது இங்கு ஆகுபொருளது.
கலைஞர் உரை:
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்;
இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
எந்தக் காரியத்துக்கானாலும் பல பேருக்கிடையில் நானென்று முன்னால் வருகிறவன் அந்தக் காரியத்திலாவது புகழுள்ளவனாக இருக்கவேண்டும். அது இல்லாதவன் முன்னால் வருவதைவிட மறைவில் இருப்பதே நல்லது.